பாட்னா,
க்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க மோடி தயாரா? என்று லல்லுபிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
பணப்பிரச்சினையில் மோடி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே  மக்கள் கொடுக்கும் தண்டனையை மோடி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.
ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் மக்கள் கொதித்து போய் உள்ளனர். நாட்டில் பணப்புழக்கம் இல்லாததால் அன்றாட வாழ்க்கைக்கே மக்கள் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக மத்தியஅரசு மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
அரசியல் கட்சியினரும் மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்து வருகின்றன.
பீகாரில், மத்திய அரசை கண்டித்து  பெரிய அளவில் போராட்டத்தை நடத்த லல்லுகட்சி தயராகி வருகிறது. அதற்காக மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் மாநிலம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கும் விதமாக  ரத யாத்திரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பேசியதாவது,
நாடு முழுவதும், ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபிறகு,
“கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, பிரதமர் மோடி,  பொதுமக்களிடம்,  இன்னும் 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் சீராகி விடும். அதற்குள் நிலைமை சீராகாவிட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்”  என்று கூறினார்.
அவர் சொன்னபடி வருகிற 30-ந் தேதியுடன் அவரது 50 நாள் கெடு முடிகிறது. ஆனால், நிலைமை தொடர்ந்து மோசமாகிதான் வருகிறதே தவிர, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பிரதமர் மோடி கூறியதன்படி எதுவும் நடக்கவில்லை. எனவே  மக்கள் மோடிக்கு  தண்டனை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதை ஏற்க பிரதமர் மோடி தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், முதலில் கருப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டு செல்லாது என கூறினார். இப்போது பணம் இல்லா பரிவர்த்தனை என்று புதிய திட்டத்தை கூறுகிறார். அவரால் ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை.
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த போது, அவர் ஏதோ வித்தை காட்டப்போகிறார் என நினைத்தோம். ஆனால், அவர் ஒட்டு மொத்தமாக குழம்பி மற்றவர்களையும் குழப்பி நாட்டையே கேலிக் கூத்தாக்கி விட்டார்.
இன்று நாடு ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடுகிறார் மோடி.  நாட்டை அவர் எந்த பாதையில் வழி நடத்தி செல்கிறார் என்றே தெரியவில்லை.
உத்தரபிரதேச தேர்தலில் பாரதீய ஜனதா இப்போது களத்திலேயே இல்லை. அங்கு பீகாரில் ஏற்பட்ட நிகழ்வு போல சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.