பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். அதனால் அரசு தரப்பில் மக்களுக்கு நிதியுதவியும் இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டன. அதன் விளைவாக, தமிழகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,228 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நேற்று ஒருவருக்கு கூட கொரோனா உறுதியாகவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.