ஆலத்தூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற முதியவர், இன்று திடீரென மரணம் அடைந்தார். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரகப்பகுதிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் நேற்றுமுதன் எண்ணப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மணிவேல் (வயது 64) என்பவர் போட்டியிட்டார். தேர்தலில் அவர் வெற்றியும் பெற்று நேற்று சான்றிதழும் பெற்றுக்கொண்டார்.

வரும் 6ந்தேதி அவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி ஏற்பார் என அவரது குடும்பத்தினர் உள்பட அந்த பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணிவேல், சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை சடலத்தை மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.