சென்னை:

சென்னை காவேரி மருத்துவமனையில் பேரறிவாளன் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களின் தாக்குதலுக்குஆனாகி உள்ள பேரறிவாளனுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த பேரறிவாளனுக்கு, அவரது தந்தை  ஞானசேகரன் என்ற குயில்தாசன் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதைத் தொடர்ந்து  கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு 23ந்ததி ஒரு  மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  பின்னர் அது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

பேரறிவாளன் தந்தை ஞானசேகரன் என்ற குயில்தாசன் (வயது 78) ஏற்கனவே  உடல் நலக்குறைவு காரணமாக வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் நாட்ராம்பள்ளி மருத்துவ மனையில் மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவ மனைக்கு அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.

இதற்கிடையில் பேரறிவாளனுக்கும் பரோல் கிடைத்த நிலையில்,  குயில்தான் இன்று (06.01.2020) சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருடன்  ஒரே மகனான பேரறிவாளன் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

மேலும் பேரறிவாளனுக்கும் ரத்த அழுத்தம், சிறுநீர் நோய் தொற்று, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற சென்னை போன்ற பெரு நகரத்தில் மட்டுமே வாய்ப்பு உள்ளதால் அவருக்கும் சென்னை காவேரி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் பேரறிவாளனும் சிகிச்சை பெறுகிறார்.