டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான, பேரறிவாளன் கருணை மனுமீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், ஒருவாரத்தில் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என கடந்த விசாரனையின்போது அறிவுறுத்தி இருந்தது. ஆனால், ஆளுநர் இதுவரை எந்தவித முடிவும் எடுக்காத நிலையில் வழக்கு வரும் 9ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ராஜீவ்கொலை வழக்கு கைதிகள்  7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தன்னை விடுவிக்கக்கோரியும்  பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதனிடையே கடந்த 22-ஆம் தேதி விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தரப்பில் இதுவரை எந்தவித முடிவும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வரும் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை  வரும் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அளித்த கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில்,வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் என்ன உத்தரவை வழங்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.