டில்லி

டந்த 2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

டில்லியில் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் வந்த சில தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.  அதையொட்டி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஃப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.  கடந்த 2016ம் ஆண்டு அஃப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காக கிலானி மீது தேச விரோத வழக்கு தொடரப்பட்டது.

நேற்று டில்லியில் வசித்துவந்த கிலானிக்கு மாலை நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.   அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   கிலானியின் மகள் நுஸ்ரத் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.