சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையை சேர்ந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனு விபரம்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவை தலைவராக தேர்ந்தெடுத்து, அவரிடம் தமிழக முதல்-வராக பதவியேற்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து முறையிட்டபோது, தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டபோது அ.தி.மு.க. தொண்டர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தற்போது அ.தி.மு.க. சார்பில் சசிகலாவை அவசர அடிப்படையில் முதல்வராக பொறுப்பேற்க முயற்சிகள் நடக்கிறது அவர் பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வெளியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் ஒருமுறை வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படும் வரை சசிகலாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.