சென்னை: தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள  தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, துணைமுதல்வர் ஓபிஎஸ்-ன் மகனும்,  தேனி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த  2019ம் ஆண்டு நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில்  அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால்,  தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றபெற்று பாராளுமன்ற மக்களவைக்கு சென்றுள்ள்ளார். ரவீந்திரநாத் குமார்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளரை விட,  76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், ரவீந்திரநாத்தின்  வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அத்தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொர்ந்திருந்தார். அவரது மனுவில், வாக்காளர்களுக்கு, வாக்குக்காக பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டடிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும், தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அவ்வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.