டில்லி

பெட்ரோல் டீசல் ஆகியவை ஜி எஸ் டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.38க்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி எஸ் டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என நிதித்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.    ஜி எஸ் டிக்கு கீழ் கொண்டு வரப்பட்ட பல பொருட்கள் விலை குறைந்துள்ளது.

நிபுணர்கள் இது பற்றி தெரிவிப்பதாவது :

”கச்சா எண்ணெயின் விலை மாறுதலுக்கேற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலகள் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.  தற்போது  பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக ஏறி உள்ளன.  அதே நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நகரத்திலும் பெட்ரோல், டீசல் ஆகியவை ஒவ்வொரு விலையில் விற்கப்படுகின்றன.   அதற்கான காரணம் வாட் வரி விதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறு படுவதே,  அதாவது டில்லியில் பெட்ரோலுக்கு வாட்வரி 27% விதிக்கப்படுகிறது.  மும்பையில் பெட்ரோலுக்கு வாட் வரி 47.64% விதிக்கப்படுகிறது.   எனவே டில்லியை விட மும்பையில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.

பெட்ரோல், டீசலை ஜி எஸ் டி கீழ் கொண்டு வருவதன் மூலம் நாடெங்கும் ஒரே வரி என்பதோடு, மற்ற வரிகள் எல்லாமும் ஜி எஸ் டி உள்ளே வந்து விடும்.  தற்போதுள்ள ஜி எஸ் டி வரி விதிப்பு முறைப்படி அதிகபட்சமாக 28%க்கு மேல் வரி விதிக்க முடியாது.   அதனால் பெட்ரோல் லிட்டருக்கு அடிப்படி விலையான ரூ.30.70 உடன்  கலால் வரி + ஜி எஸ் டி 12% என எடுத்துக் கொண்டால் ரூ.38 ஆகும், அதே 28% ஜி எஸ் டி என்றாலும் கூட ரூ.43.44 தான் அதிகபட்சமாக இருக்கும்.

தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 70 என்பது குறிப்பிடத்தக்கது.