புதுடெல்லி: சுருக்கமாக ‘பிஎஃப்(PF)’ என்று அழைக்கப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5% என்ற அளவில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஃப் என்றழைக்கப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு எவ்வளவு வட்டி அளிக்கலாம் என்பதை ஆண்டுதோறும், சிபிடி எனப்படும் மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயம் செய்கிறது.

கடந்த நிதியாண்டில், வட்டி விகிதம் 8.65% என்பதாக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு 2019-20க்கான வட்டிவிகிதத்தை நிர்ணயிக்க அறங்காவலர் வாரியக் குழு கூட்டம் டெல்லியில் மார்ச் 5ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதில், பிஎஃப் வட்டி விகிதத்தை குறைக்குமாறு அறங்காவலர் வாரிய குழுவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும், நிதி அமைச்சகம் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 2019-20 ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.65% என்பதிலிருந்து 8.5% என்ற அளவிற்கு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.