புதுதில்லி:
ழியர்களின் சேமிப்பு பணத்தை வைத்து சூதாட நீங்கள் யார் என்று மத்திய அரசை நோக்கி ஆவேசமாக கேட்டார் மார்க்சிஸ்ட் எம்.பி. தபன்சென்.
ஊழியர்களின் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியான பி.எப் பணத்தை எடுத்து, பங்கு சந்தையில் முதலீடு செய்ய மத்தியஅரசு முயற்சி செய்வது குறித்து, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
pf
இதுகுறித்து, சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  மாநிலங்களவை உறுப்பினருமான தபன் சென் பேசியதாவது:
மத்தியஅரசு தற்போது மேற்கொள்ளும் முயற்சி மிகவும் ஆழமானது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு மாறி மாறி பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு தலையிடுகிறது என்றே தெரியவில்லை.
முதலில் பிஎப் பணத்துக்கு வரி விதித்தீர்கள். பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள்.  பின்னர் பிஎப்பில்  தொழிலாளர்கள் முன்பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தீர்கள். ஆனால் தொழிலாளர்கள் எதிர்த்ததால் திரும்பப் பெற்றீர்கள்.
பிஎப் பணம் என்பது,  அடிப்படையில்  தொழிலாளர்களின் சொந்தப் பணம். அதைத்தான் அவர்கள் திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். அதைத் தடுப்பதற்கும், கட்டுப்பாடுகள்  விதிப்பதற்கும் நீங்கள் யார்?  இதுபோல இனிமேல் செய்யாதீர்கள் என அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரின. அவற்றையெல்லாம் நீங்கள் கேட்கவே இல்லை. பின்னர்  நாடு முழுதும் உள்ள தொழி லாளர்கள் ஒன்றிணைந்து போராடி, உங்களைக் கேட்க வைத்தார்கள்.
இதற்கு பிறகும், தொழிலாளர்களின் பணத்தை மிகவும் நாசம் விளைவிக்கும் சோதனையில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறீர்கள். அவர்கள் பணத்தை பங்குச் சந்தையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  கேட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்கிறீர்கள். இது சரியல்ல.
மத்திய அறங்காவலர் குழுவும் (The Central Board of Trustees), தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் : “சூதாட்டத்தின் மூலம் ஈட்டும் கூடுதல் பணம் எங்களுக்குத் தேவை இல்லை,’’ என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்கள்.  மிகவும் தெளிவான முறையில் அவர்கள் இதைக் கூறி இருக்கிறார்கள்.  இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பி.எப்.-ல் புதிய விதிமுறைகள் அமல்படுத்த எதிர்த்து போராட்டம்
பி.எப்.-ல் புதிய விதிமுறைகள்  எதிர்த்து போராட்டம் (ஏப்ரல் 2016)

அப்படி இருக்கும்போது, நீங்கள் அவர்களின்  அனுமதி இல்லாமல், அவர்களை எதுவும் கேட்காமல், வருங்கால வைப்பு நிதி விசயத்தில் தலையிடுகிறீர்கள்?
இது தொடர்பாக உங்கள் அனுபவம்தான் என்ன? ஓராண்டுக்குள் 7.45 சதவீதம் ஆதாயம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.   ஆனால், நீங்கள் சொல்லாமல் விட்டது  முதல் பத்து மாதங்களில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்பதாகும்.
ஆனால் நான் ஒரு விஷயத்தை  அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதற்கு அமைச்சர் ஒப்புக்கொள்வாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால்,  வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டிருக்கும் தொகை முழுவதுமாக தொழிலாளர்களுக்குச் சொந்தமான தாகும். அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு இதில் செலுத்தப்பட்டிருக்கிறது.
இதில் வேலையளிப்பவர்கள் செலுத்தும் தொகையும் கூட, தொழிலாளர்களின் ஒத்திவைக்கப்பட்ட சம்பளமே. (deferred wage) ஆகும். ஒத்திவைக்கப்பட்ட சம்பளமும் தொழிலாளர்களையே சாரும்.  ஆகவே “எங்களை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள்; எங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலுமோ கூடுதலாக எந்தப் பணமும் வேண்டாம்; தயவு செய்து மத்திய அறங்காவலர் குழு தீர்மானிக்கும் வழக்கமான முதலீட்டு வழிகளையே பின்பற்றுங்கள்’ என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் நீங்களோ  பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான சிந்தனையை ஊழியர்களிடம்  திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்ய தற்போது ஐந்து சதவிகிதத் தொகையை  எடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது கூடிய விரைவில் பதினைந்து சதவீதமாக அதிகரிக்கும்.
ஆனால் இந்த சதவிகிதத்தைக் கூட எடுப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே  தயவுசெய்து இத்திட்டத்தை கைவிடுங்கள்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் தனிநபர் லாபம் ஈட்டுவது என்பது வேறு, அரசு ஈடுபடுவது எனபது வேறு. பொதுப்பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நஷ்டம், நஷ்டம் மேலும் நஷ்டம் என்பதுதான் நடக்கும். இதுதான் உலக அனுபவமும் ஆகும்.
பங்குசந்தையில் முதலீடு செய்துள்ள ஜப்பான், பிரான்ஸ்,பிரிட்டன் அல்லது அமெரிக்கா போன்ற  நாட்டின் அனுபவத்தை  பாருங்கள். அந்த  நாடுகளில் பங்கு வர்த்தகத்தில், நஷ்டம் ஏற்படுமானால், அரசாங்கம் ஓர் உத்தரவாதமான தொகையைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறது. அதேபோன்று இங்கே கொடுப்பதற்கு நீங்கள் தயாரா? அவ்வாறு எவ்வித உத்தர வாதத்தையும் கொடுக்காமல், அந்தப் பாணியை இங்கே எப்படி நீங்கள் பின்பற்ற முடியும்?
எனவே, தொழிலாளர்கள், ஊழியர் வைப்பு நிதியில் போட்டுள்ள தொகையுடன் – அவர்கள் வாழ்நாள் முழுதும் சேர்த்து வைத்துள்ள தொகையுடன்  தயவு செய்து  விளையாடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்
சூதாட்டத்தின் மூலம் கிடைக்கும் கூடுதல் பணம் அவர்களுக்குத் தேவை இல்லை. இதை விட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களால் வங்கிகளிடம் பெறப்பட்டுள்ள 8.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க கவனம் செலுத்துவது நல்லது.
தொழிலாளர்களின் சொந்தசேமிப்புடன் விளையாடாதீர்கள். தயவுசெய்து உடனே அதை நிறுத்துங்கள். இதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் விரும்பும் மொழியில் தொழிலாளர்கள் அதை உங் களுக்குப் புரிய வைப்பார்கள்.
இவ்வாறு தபன்சென் பேசினார்.