சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நவம்பர் 18ம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, பொது பிரிவு, இடஒதுக்கீடு பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 10ம் தேதி வரையும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அதே தேதியில் தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரையும் நடந்தது.

இந் நிலையில், 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது. பின்னர் 5ம் தேதி முதல் 11ம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11ம் தேதி பிற்பகல் முதல் 13ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்றும் கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் காலியாகவுள்ள இடங்கள் நிரப்பப்படுகின்றன.