புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் சொத்துக்களைக் கண்காணிக்கவும் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், ஆளில்லா உளவு விமானங்களை மத்திய அரசு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது, “ரயில் நிலையம், ரயில் தண்டவாளம், ரயில் பணிமனை மற்றும் ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களை கண்காணிக்க, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ‘நிஞ்சா’ என்ற ஆளில்லா உளவு விமானங்களை வாங்குவதற்கு செய்ய முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக, 9 விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில், கூடுதலாக 17 உளவு விமானங்கள் வாங்கப்படும்.

இவற்றை, ரயில் நிலையம், தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் பறக்கவிட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.