டில்லி

ந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற  புதிய திட்டங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

இந்திய ரெயில்கள் உலகின் சிறந்த ரெயில்வேக்களில் ஒன்று என வசதிகள் அடிப்படையில் நற்பெயரைப் பெற்றுள்ளது.   ஆனால் ரெயில்வே என்றாலே தாமதம் என்னும் நிலை உள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.   அதிவேக ரெயில்கள் என பெயரிடப்பட்ட ரெயில்களும் மெதுவான வேகத்தில் செல்வதால் இந்த தாமதம் ஏற்படுகிறது என பொதுவாக ஒரு கருத்து நிலவி வருகிறது.

இதற்கு முக்கியக் காரணம் இந்திய ரெயில்வேக்களின் உள்கட்டமைப்பாகும்.   இதில் தண்டவாளங்கள்,  ரெயில் எஞ்சின்கள் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இவற்றை மேம்படுத்தத் தேவையான நிதிநிலை பற்றாக்குறை இந்திய ரெயில்வேக்கு இருந்து வருகிறது.   குறிப்பாக நீண்ட தூரம் செல்லும் ரெயில்களுக்கான தனிப்பாதைகள் எங்குமே இருப்பதில்லை.   இதனால் அந்த ரெயில்கள் மட்டுமின்றி உள்ளூர் ரெயில்களும் தாமதம் ஆகின்றன.

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ரெயில்களின் மந்த நிலையைத் தவிர்க்க விரைவு ரெயில்கள் செல்ல தனி தண்டவாளங்கள் அமைப்பது இன்றியமையாததாக உள்ளன.   இதற்கு வரும் 12 ஆண்டுகளில் சுமார் ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது.   இதற்கான முதலீடுகளை ஈட்டும் நிலையில் இந்திய ரெயில்வே உள்ளது.

இதற்காகத் தனியார் முதலீடுகளை இந்திய ரெயில்வே பெருமளவில் நம்பி உள்ளது. அதே வேளையில் ரெயில்களை தனியார் மயமாக்கும் திட்டங்கள் இல்லை.  ஆனால் அரசு மற்றும் தனியார் பங்குபெறும் ஒரு திட்டம் அமைக்கப்பட உள்ளது.    இவ்வாறு தனியார்கள் பங்களிப்பு ஏற்படும் போது கிடைக்கும் நிதியில் ரெயில்வே உள்கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்படும்.

எனவே ஒரு சில இடங்களில் மட்டும் தனியார் பங்களிப்புடன் கூடிய ரெயில் சேவைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது  அதன் ஒருபகுதியாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி நகரில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசி வரை சிறப்பு ரெயிலை தனியார் பங்களிப்புடன் ஐ ஆர் சி டி சி  இயக்க உள்ளது.   இதன் மூலம் காசிக்குச் செல்லும் பக்தர்கள் பெருமளவில் பயன் அடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.