சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருவதால்,  ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் நேற்று (10ந்தேதி)புதிதாக 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு. இதன் காரணமாக  மொத்த பாதிப்பு எண்ணிக்கை  36,841 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர்  எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து பொதுநல வழக்குகளை விசாரித்து வரும்  சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் அமர்வு கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து இன்று விசாரணை நடத்தியது.

அப்போது, சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்  ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.   மேலும், இதுகுறித்து தமிழகஅரசிடம் கலந்தாலோசித்து,  நாளை விளக்கம் தர தமிழக அரசுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றம் தானாக முன்வந்து ஊரடங்கு தொடர்பாக பொதுநல வழக்க எதையும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.