சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி செல்கிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. பொதுமக்கள் வழக்கம்போல் அன்றாட பணிகளில் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை 1,000 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் படுக்கை வசதியை 2 ஆயிரம் ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் துவக்கி வைக்கப்படுகின்றன. சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று கூறினார்.