சென்னை:
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 7 அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட இருப்பதாகவும் கூறினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மாலை பிளாஸ்மா வங்கியை திறந்து வைத்த அமைச்சர் பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, கொரோனா நோயாளி களுக்கு, பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர், 14 நாட்களுக்கு பிறகு தைரியமாக பிளாஸ்மா தானம் அளிக்கலாம், ஆனால், அரசு வகுத்துள்ள விதிகளின்படி, பிளாஸ்மா தானம் அளிக்க தகுதி உள்ளவர்கள் தானம் அளிக்க முன் வர வேண்டும், மக்களிடையே ஏற்பட்டுள்ள கொரோனா அச்சத்தை போக்கும் வகையில், தாமாகவே முன்வந்து, உயிரைக் காப்பாற்ற பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 26 பேருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்பட உள்ளது.
அதன்படி, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சேலம், திருச்சி, கோவை, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.