சென்னை,

மிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நடிகர் விஷால் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.கே நகரில் புது வண்ணாரப்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள கடைகளை மூட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார். அமரர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24-ம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன.

இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும் ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்  தினகரனையும் கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோல் தமிழ்நாடு முழுக்கவிருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.