டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த தீபாவளியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உள்ளூர் பொருள்களையே பொதுமக்கள் வாங்க வேண்டும். அதன் மூலம் உள்ளூர் தயாரிப்பாளர்கள், வியாபாரிகளின் வாழ்விலும் ஒளியேற்றுங்கள்.

உள்ளூர் பொருள்களை வாங்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த தீபாவளியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளுக்குச் செல்லும் போது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கி, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை தாருங்கள் என்று வலியுறுத்தினார்.