ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த தகவலை நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஷர்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்ட போது  குறைந்தது 17 பேர் ஆலைக்குள் இருந்தனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

சி.ஐ.எஸ்.எப் பணியாளர்களும் மீட்புப் பணிகளில் களம் இறங்கினர் என்று கூறினார். சுரங்கப்பாதையில் இருந்து புகை வெளியேறி வருகிறது என்பதால் அதன் தீவிரத்தை குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ மிகவும் துரதிர்ஷ்டவசமானது. என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி உள்ளார்.