ஆமதாபாத்:
மதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் நவரங்க்பூர் பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை மருத்துவமனையின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 35 க்கும் மேற்பட்ட நோயாளிகள், வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில், ‛ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். முதல்வர் விஜயரூபானி மற்றும் மேயரிடம் மீட்பு பணிகள் குறித்து பேசினேன். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்,’ என தெரிவித்துள்ளார்.