டெல்லி:

பாஜக தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது  நினைவிடத்தில் கொட்டும் பனியிலும் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.‘

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 95வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள சைதவ் அடல் (Sadaiv atal) நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் வாஜ்பாயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பின்னர் கொட்டும் பனியில்,  அங்கு சிறிது நேரம் அமர்ந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.