சென்னை:

சென்னையில், அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலையோரம் பேனர் வைத்த பாமக நிர்வாகி மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக  காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில்  உள்ளது. தேர்தல் பிரசாரங்களும் வேட்பு மனுதாக்கல்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மத்திய சென்னையில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாம் பால்  அறிமுகக் கூட்டம்  சென்னை சேத்துப்பட்டி குருசாமி சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த சென்னை மாவட்ட பாமக துணை அமைப்புக் செயலாளர் தனசேகரன்,   மத்திய சென்னை பாராளுமன்ற வேட்பாளர் சாம் பாலை வரவேற்று பேனர் வைத்திருந்தார்.  இது தேர்தல் விதி முறை மீறிய செயல் என்று புகார் எழுந்தது.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் பாமக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.