தன்னம்பிக்கைக்  கவிதை – பகுதி 3

திட்டமிடல்

பா. தேவிமயில் குமார்

 

நான் அழகானவன் என

நாள் தோறும்

கண்ணாடி முன் நின்று

கண் சிமிட்டி சொல்லிடுங்கள் !

 

நான் வலிமையானவன் என்ற

நல்ல வார்த்தையை

நாளும், நாளும்,

நயம்பட உரைத்திடுங்கள் !

 

நான் திறமையானவன் என

தினம், தினம், ஏன்…..

திரும்ப, திரும்ப உரைத்திடுங்கள்

திருப்பம் கிடைத்திடும் ! நிச்சயமாக !

 

வாய்ப்புகளை நோக்கி

வாழ்க்கைப் பாதையை

வகுத்துக் கொள்ளுங்கள்,

வாழ்க்கை வசந்தமாகும் !

 

நம்பிக்கை யானது எங்கும்

நிறைந்துள்ளது, காற்றைப் போல,

வேண்டுமளவு மனதில்

நிறைத்துக்கொள், தடுப்பவர் யாருமில்லை !

 

சரியான திட்டமிடல் மட்டுமே

சாதிக்க நினைப்பவர்

வைத்திருக்கும் ஒரு

உறுதியான அஸ்திரமாகும் !

 

எறும்புகள் கூட கேட்பதில்லை

ஒய்வு நேரத்தை…… ஆனால் நீ ???

கடவுளே ஆனாலும், அவருக்கும்

கடந்த காலம் திரும்பக் கிடைக்காதே !

 

இரும்புக் கம்பிகள் என்றும்

ஈரத்தில் வளைந்திடாது,

எவருக்கும் வாழ்க்கையானது

எளிதாக இருந்திடாது !

 

உன் வாழ்க்கை ஒன்றும்

வாடகை வீடல்ல,

அடுத்தவர் வசித்திட,

அதை நீதான் வாழ வேண்டும்,

அதனை நீயே செப்பனிட வேண்டும் !

 

உன்,

குறைகளை சுட்டிக்காட்ட

கூட்டமே சேர்ந்திடும்,

ஆனால்…..

நிறைகளைப் பாராட்ட

நேரமிருக்காது அவர்களுக்கு !

 

ஒவ்வொரு மனிதரிடமும், ஏதோ

ஒரு அழகியல் இருக்கும்

அதனை எடுத்துக்கொள்,

அடுத்தவரின் குறைகளை

அவர்களிடமே விட்டுவிடு !

 

முன்னேற்றம் என்பது வெறும்

முயற்சியால் மட்டும் வருவதல்ல !

மனிதத்துவம் இருந்தால்

மட்டுமே அதுவும் கைக்கூடும் !

 

நீ கேட்பதையெல்லாம்

நிறைவாய்க் கொடுத்திட

பிரபஞ்சம் தயாராக உள்ளது,

பின் ஏன் இன்னும் உறக்கம் ?

எடுத்து வை உன் முதல் அடியை

எட்டிப் பிடிக்கலாம் அண்டத்தை !

வெற்றி உனதே ! வா ! சாதிக்கலாம் !