தன்னம்பிக்கைக்  கவிதை – பகுதி 1

 

வைரமாகலாம்

 

பா. தேவிமயில் குமார்

 

ஒவ்வொரு நொடியும்

  யாரோ, எங்கோ,

  சாதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்

காலம் உனக்காகக் காத்திருக்காது,

  ஆனால்…….

  கதைகள் உனக்காக வைத்திருக்கும்

  அடுத்த சந்ததிகளுக்கு சொல்லிட !

எழுந்தவுடன் அன்றைய தினத்துக்கான

  எழுச்சி ஒப்பனைகளை தீட்டிக்கொள்

சாதிக்க நினைக்கும்போது,

  தினம் உன் நாள் காட்டி

  திருவிழாக்களையேக் காண்பிக்கும் !

ஆயத்தமாய், இரு, நம்பிக்கை

  ஆயுதங்களை ஏந்திடும்

  போர் வீரனாய் இரு !

உன் பயணம் “எதுவென்று” உணர்ந்தால்

  உன் பாதை “எதைவென்று” வரலாம் என

  உனக்குக்  காட்டிடும் !

அப்புறம் பார்க்கலாம் என்ற

  எண்ணத்தை உடனே

  அப்புறப்படுத்து !

அலைகடல் தூங்குவதில்லை, உனக்கு மட்டும்

  அதிகாலை நித்திரை ஏன் ?

அனுபவங்களை கைக்கொள்,

  அதுவே ஆபரணங்களாகட்டும்

  அணிந்துகொள் சிந்தையில் !

விழி நீரோடு எதையும் எண்ணாதே !

  வழி என்ன ? என எண்ணிடு !

இன்று நூல்களை

  இரவல் வாங்கியாவது படித்திடு !

நாளை உனக்காக ஒரு

  நன்னூல் கூட எழுதப்படலாம் !

இரைதேடும் பறவைகள் கூட

  இலக்குகளோடுதான் பயணிக்கின்றன

  மனிதா நீ என்ன செய்கிறாய் ?

நேர்மறை எண்ணம் கொண்ட

  நபர்களை நண்பர்களாகக் கொண்டால்

  நாளைய பொழுது உனதாகும்

காலப் போக்கில்,

  கரிமம் கூட

  கனிமமாக மாறுவதை

  கண்கூடாக பார்க்கிறோம் !

நீயும் அதுபோல

  நல்ல வைரமாகலாம் !

  காத்திரு,

  காலம் உனக்காக

  கதைகளை வைத்திருக்கிறது !

எழுந்து வா ! உனக்கு

  ஏணி தேவையில்லை

  எண்ணங்கள் போதும்

  ஏற்றம் கொண்டிட !