சென்னை:

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இயக்குநர் வ. கவுதமன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிப்பது இல்லை.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாக, மே 17 இயக்கம் , மெரினாவில் அஞ்சலி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அதே நேரம், மெரினா கடற்கரையில் சட்ட விதிகளை மீறி, கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்தது.

மேலும்,, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று 500க்கும் மேற்பட்ட போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, “அறிவித்தபடி , நினைவேந்தல் கூட்டம். இதற்கு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். சிறை செல்வது குறித்து எங்களுக்கு அச்சம் ஏதுமில்லை. தடியடியை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். நிச்சயம் 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள், இன்று மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்துவோம்” என்று திருமுருகன் தெரிவித்தார்.

திருமுருகன் கூறியப்படி இன்று மாலை மே 17 அமைப்பினர் மெரினாவில் கூடத் துவங்கினர். இதனைத்தொடர்ந்து காவல்துறை மே 17 இயக்கத்தினரை கைது செய்தது. திருமுருகன் காந்தியும் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த திரைப்பட இயக்குநர் வ.கவுதமனும் கைது செய்யப்பட்டார்