12 கிமீ மோப்பம் பிடித்து கொலையாளியைப் பிடித்த துங்கா

கடந்த ஜூலை 10ம் தேதி, கர்நாடகா மாநிலம் டேவனகேரே அருகே உள்ள காஷிப்பூர் தண்டா பகுதியில் வசிக்கும் சேத்தன் மற்றும் சந்திர நாயக் உள்ளிட்ட நண்பர்கள், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு துப்பாக்கியைத் திருடிச் சென்றுள்ளனர்.  இதில் பங்கு பிரிப்பதில் நடந்த தகராற்றில் சேத்தன் நண்பர்களுடன் சேர்ந்து சந்திர நாயக்கைக் கொலை செய்யத் திட்டமிட்டான்.

நாயக்கை சூல்கேர் அருகே உள்ள தொட்டிலு என்னும் பகுதிக்கு வரவழைத்த சேத்தன், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.  இந்த கொலை சம்பந்தமாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், கர்நாடக போலீஸ் படையைச் சேர்ந்த துப்பறியும் நாய் துங்காவை வரவழைத்தனர். துங்கா சம்பவ இடத்தை நன்றாக மோப்பம் பிடித்து, கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 12 கி.மீ., தூரத்தை 2 மணி நேரத்தில் ஓடிக்கடந்து, இறுதியாக காஷிப்பூர் தண்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே நின்றது.

அது சந்திர நாயக்கின் உறவினர் வீடாகும். அதன் அருகே சேத்தன் போனில் யாரிடமோ பிஸியாக பேசிக்கொண்டிருப்பதை அறிந்த போலீசார் கைது செய்தனர்.  அவனிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை மற்றும் கொலை குற்றத்தை சேத்தன் ஒப்புக்கொண்டான்.  கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தை 2 மணிநேரத்தில் கடந்து குற்றவாளியைத் தேடிப்பிடித்த துங்கா நாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிறந்த குட்டியாகக் கர்நாடகா போலிஸ் படையில் சேர்க்கப்பட்ட துங்கா ஒன்பது ஆண்டுகளில் 30 கொலைகள் உள்ளிட்ட 60 வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவி புரிந்துள்ளது. இவற்றுள் 25 திருட்டுச் சம்பவங்களும், 5 கூட்டுக்கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களும் அடங்கும்.

– லெட்சுமி பிரியா