ஆற்றில் வீசப்பட்ட குழந்தை..  ஒரு மணி நேரத்தில்  தேடிப் பிடித்த போலீசார்..

மாதிரி படம்

திருக்கோவிலூர் ஆற்றுப்பகுதியில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கே சென்று பார்த்துள்ளனர். அங்கே யாரோ ஒரு பெண் குழந்தையை வீசிச் சென்றிருப்பதைப் பார்த்து  குழந்தையை உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

மருத்துவ மனையின் மூலமாக திருக்கோவிலூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட உடனே விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் தலைமையிலான போலிசார், ஆற்றில் வீசி சென்ற குழந்தையின் தாயான தீபாவை ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது தான் தீபா (33) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மங்களம் கிராமத்தைச் சார்ந்த முத்து என்பவரின் மனைவி என்பதும், இவர்களுக்கு ஏற்கனவே 8 வயதில் ஓர் ஆண் குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் சில மாதங்களிற்கு முன்னால் சித்தூருக்கு பணிக்கு சென்ற பாவிற்குக் கடந்த 15-ம் தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அங்கிருந்து தனது தாய் வீட்டிற்கு திருக்கோவிலூர் அடுத்துள்ள மிலாரிபட்டு கிராமத்துக்கு வந்துள்ளார்.  அங்கிருந்து திருக்கோவிலூர் வந்ததும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை ஆற்றில் வீசி சென்றுள்ளார்.  போலீஸ் விசாரணையில், தாம் ஏற்கனவே வறுமையில் தவித்து வருவதாகவும், பிறந்தது பெண் குழந்தை என்பதால் தன்னால் வளர்க்க முடியாது என்ற காரணத்தால் ஆற்றில் வீசி சென்றதாகக் கூறியுள்ளார்.

பின்னர் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் தீபாவிற்கு அறிவுரை வழங்கி, குழந்தைக்குச் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார். குழந்தையின் தாயை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

-லெட்சுமி பிரியா