சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதை அடுத்து சென்னை பெருநகர காவல்துறையின் கவனம் முழுதும் அங்கே குவிந்திருக்கிறது.

இதைப் பயன்படுத்தி சென்னையின் இதர பகுதிகளில் சமூகவிரோதிகள் கொள்ளை மற்றும் செயின் பறிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது.

அசோக்நகரில் அடுத்தடுத்த 2 கடைகளின் பூட்டை உடைத்து ஒரு தொலைக்காட்சி, ரூ.8000 பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். காவல்துறையில் சிக்காமல் இருக்க, கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

கடந்த சில நாட்களாகவே சென்னையின் பல பகுதிகளில் கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

“ஆர்.கே.நகர் தேர்தல் பணியில் காவல்துறையினர் கவனம் செலுத்துவதால் சென்னையின் இதர பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

பல கொள்ளைச் சம்பவங்கள் குறித்த புகாரை காவல் நிலையங்களில் பதிய மறுப்பதும் நடக்கிறது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.