பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரபரப்ன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவின் அறை உள்பட சிறையில் காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் ஏராளமான மொபைல் போன்கள், கத்திகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறை உள்ளது.  இந்த சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறை வளாகத்தினுள்ளேயே, பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது.

இந்த சிறைச்சாலையில் உள்ள பெண்கள் அறையில்தான்  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான  சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் அடைக்கப்பட்டு தணடனை அனுபவித்து வருகின்றனர்.

இங்குள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ள வர்களோடு சரளமாக செல்போன் மூலம் பேசுவதாகவும்  பெங்களூரு மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து,  பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 5 மணி முதல்  சிறைக்குகுள்  சென்று கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் அறைகள் உள்பட பெரும்பாலான அறைகளிலும் சோதனை நடைபெற்றதாகவும, இதில், கஞ்சா பொட்டலங்கள், நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள், சிம்கார்டுகள், மதுபாட்டில்கள், ஏராளமான கத்திகள்  சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.