தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இன்று தூத்துக்குடி வந்தனர். மருத்துவமனை சென்ற அவர்களை மக்கள் யாரும் முற்றுகையிட்டு விடாமல் தடுப்பதில் போலீசார் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

இதனால் அவர்கள் மருத்துவமனை உள்ளே இருந்தபோது சாதாரண உடையணிந்த போலீசார் மனித சங்கிலி அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். மருத்துவமனையின் உள்ளே யாரையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். பத்திரிக்கையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், மருத்துவமனை வளாகம் முழுவதும் அதிக எண்ணிககையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.