சென்னை: ஜனவரி 31ம் தேதியன்று 1644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: கடந்த 25 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் தீவிர கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் ஜன.31 அன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான ஜன.31 அன்று பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1,644 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் போலியோ நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது.

இதனால், இந்த வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெற்றோர்களாகிய நீங்கள், உங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டுமருந்து மையத்திற்குச் சென்று, உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது.

ஆகவே, அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டுமருந்து ஒரே நாளில் போட்டுக் கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச் சூழலிலிருந்து அறவே ஒழிக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் ஜன.31 அன்று நடைபெறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும். முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

தீவிர போலியோ சொட்டுமருந்து ஜனவரி 31 அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள், இந்த நாளில் அதாவது ஜனவரி 31 அன்று தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதுமட்டுமின்றி ஜன.31 அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சொட்டு மருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத் துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 6,700 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெற்றோர்கள் 5 வயதிற்குட்பட்ட உங்கள் அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் அவசியம் ஜனவரி.31 அன்று போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.