சென்னை: ரேஷன் கடைகள் முன் அரசியல் கட்சிகள் பேனர், கட்அவுட்கள் வைக்கக் கூடாது என திமுக தொடர்ந்த வழக்கில்  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகஅரசு, இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 பணமும் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக அதிமுக கட்சி பொறிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்குவதாகவும் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,பொங்கல் பரிசுத் தொகை டோக்கன் களில் அரசியல் கட்சிக ளின் சின்னங்கள், தலைவர் களின் படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. அப்போது,   தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன்,  நீதிமன்ற  உத்தரவை மீறி, பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேசன் கடைகள் முன் அ.தி.மு.க.வினர் பேனர்கள் வைத்து இருப்பதாக முறையிட்டார்.

இதுதொடர்பான வழக்கு இன்று  தலைமை நீதிபதி அமர்வில் விசாரிணைக்கு வந்தது. அப்போது,  பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் ரேஷன் கடைகள் முன் அரசியல் கட்சிகள் முறையான அனுமதியின்றி பேனர், கட்அவுட்கள் வைக்கக் கூடாது, கடைகளுக்கு உள்ளேயும் எந்தவித விளம்பரமும் செய்யக்கூடாது என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.