டில்லி:

மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் கையாளப்பட்டு வருகிறது. இந்த பக்கத்தை அமைச்சக அதிகாரிகள் தான் கையாளுகின்றனர். இந்நிலையில் இந்த பக்கத்தில் இன்று அரசியல் தொடர்பான ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. இது சமூக வலை தளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக ராஜ்புட் மற்றும் கார்னி சேனா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட் டுள்ளனர். அப்போது, குருகிராமில் ஒரு பள்ளி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக.வை கண்டித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இதற்கு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியிருந்தது. அதில், ‘‘ கார்னி சேனா வன்முறையை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ஒரு டுவிட் கூட வெளியிடவில்லை. மாறாக இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சக டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தியின் கருத்தை விமர்சனம் செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.