கோவை:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள  குற்றவாளிகள் 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கையை கோவை நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரும் சம்பந்தப்பட்டு இருப்பதால்  வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து விசாரணையை கையில் எடுத்த சிபிஐ, பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தும், 2 தனிக்குழுக்களை அமைத்தும் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது குற்றவாளிகளுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக சிபிஐ கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து குற்றத்தில் ஈடுபட்டுவிட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.