பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் போல, நாட்டில் இனிமேல் எங்கும் நடைபெறாத வாறு தடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை… இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தொழில்நுட்ப நிபுணர் செல்வமுரளி கூறியுள்ள பயனுள்ள தகவல்கள்….

மத்திய மாநில அரசுகள் இனிமேலாவது விழித்துக்கொள்ளுமா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சமூக வலைத்தளங்களிலும், ஏனைய தளங்களிலும்  ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களைக் கூறினாலும் நடவடிக்கை எடுத்தாலும் இவையெல்லாம் வேரை விட்டு விட்டு துளிரை கிள்ளுவது போல்தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி விவகாரம்  வெறும் பாலியல் வன்புணர்வு மட்டுமல்ல தொழில்நுட்பம் தெரிந்த ஒருவன் பிறரை பயமுறுத்த எடுத்துக்கொள்ளும் ஆயுதம்….  சமூக வலைத்தளங்களான பேஸ்புக், யூடியூப்தான் இதில் மிகப் பிரபலமானவை.

இவையிரண்டையும்  பயன்படுத்தும் மக்களை தக்க வைத்துக்கொள்ள அந்த நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கொடுக்கும் புதிய வசதிகள்  எல்லா தரப்பு மக்களுக்கும் ஏதாவது ஒரு இடத்தில்  அது பிரச்னையை ஏற்படுத்தும் அந்த பிரச்னை நிச்சயம் பெரும் தாக்கத்தினைத்தான் ஏற்படுத்தும். அதுக்கு தற்போது நடைபெற்றுள்ள சம்பவங்களே சான்று…. 

சமூக வலைத்தளங்கள்  தனது வேரை உலக நாடுகளெங்கும் பரவி தங்களை பலப்படுத்திக் கொண்டுள்ளன. அவற்றால் நடைபெறும் சி்க்கல்களுக்கு  தீர்வு கிடைக்கும். ஆனால் உடனே கிடைக்காது. ஏனெனில் அவர்களிடம்  பணியாளர்களின் வெகு சொற்பம். செயற்கை நுண்ணறிவு முழுமையாக வந்த பின்னர் நமக்கான தீர்வு முழுமையாக கிடைக்குமா என்று சொல்லமுடியாது.

ஆனால், இதுபோன்ற வசதிகளினால்  பெண்கள் பாதிப்படைக்கிறார்கள்,  மறைவாய் எடுத்த காணொளியை கொண்டு அவர்களை  மிரட்டுகிறார்கள்….. பெண்களும் இந்த  காணொளி (வீடியோ) சமூக வலைதளங்களில் பகிரப்பட்டால் நமது குடும்ப மானம் காற்றில் பறக்கும் என்றும், அந்த அவப்பெயர்  காலத்துக்கும் மாறாது… என்பதால்… அவர்களின் மிரட்டலுக்கு பணிந்து போகிறார்கள்…

இந்த கணத்தில்’ ‘தொழில்நுட்ப பொறியாளனாக நான் (செல்வ முரளி, விசுவல் மீடியா டெக்னாலஜிஸ்)  இந்திய அரசின் கட்டுப்பாட்டைத்தான் குறை  சொல்லுவேன், ஏனெனில் சமூக வலைத் தளத்தில் சந்தேகத்துக்கு உரிய  எந்த செய்தியாக  இருந்தாலும் அதை நாங்கள் யாரேனும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் புகார் அளிக்கும் நேரம், அதற்கான தீர்வுகளுக்கு எடுக்கப்பட ஆகும் நேரம் போன்றவற்றை பார்க்கும்போது, அந்த குறிப்பிட்ட கால நேரத்திற்குள்,  அந்த காணொளிகள் லட்சக்கணக்கானோரை சென்றடைந்து விடுகிறது…

இதுபோன்ற மக்கள் விரோத பதிவுகள் பராவமல் தடுக்க அனைத்து சமூக வலைதள நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டியது நாம், ஆனால் நாம் கட்டுப்பாட்டை கட்டவிழ்த்துவிட்டுவிட்டு அதன் பின் வடை போச்சே என்று புலம்புகிறோம்…

இந்திய அரசாங்கமோ தமிழக அரசோ, சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்து ஏதேனும் தவறான ஒரு வீடியோ பதிவிடப்பட்டால் அதை எப்படி நீக்குவது, பலரிடம் பரவாமல்  எப்படி தடுப்பது என்பது குறித்து யோசிக்க மறுக்கிறது…

தற்போதைய  பொள்ளாச்சி விவகாரமும் அதுபோலவே…. இந்த விவகாரத்தின் ஆணிவேரை விட்டு விட்டு, முளைத்து வரும் துளிரை கிள்ளுவதால் என்ன பயன்?

பொள்ளாச்சி  பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சமூக வலைத்தளங்களிலும், ஏனைய தளங்களிலும்  ஆளாளுக்கு தங்கள் விருப்பம்போல  கருத்துக்களைக் கூறினாலும், அதுபோல, தற்போது போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் இவையெல்லாம் வேரை விட்டு விட்டு துளிரை கிள்ளுவது போல்தான் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்கமோ தமிழக அரசோ, சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்து ஏதேனும் தவறாக ஒரு வீடியோ சமூக தளத்தில் இருந்து அதை புகார் கொடுத்த அந்த நொடியே தடை செய்துவிட்டு அதன்பின்னர் விசாரணை நடத்தி அதை வெளியிடலாம்’’ என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவரலாம்.

சிறிய உதாரணம்

2010ம் ஆண்டு பெண் நண்பருக்கு  ஒரு சி்க்கல், அவருடைய எண்ணை கொண்டுபோய் ஒரு இணைய தளத்தில் மசாஜ் செய்ய இவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று யாரோ பிடிக்காத நபர் அந்த தளத்தில் போட்டுவிட அந்த பெண் நண்பருக்கு அழைப்பு போய் கொண்டே இருக்கிறது. அவருக்கு எதனால் இப்படிப்பட்ட  அழைப்பு வருகிறது என்று தெரியாத நிலை, ஒரு நாள் கழித்து யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறான் இந்த தளத்தில் இருந்து வந்து இருக்கிறது என்று. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மடல் அனுப்பியபோது அதன் தலைமையகம் வெளிநாட்டில் இருப்பதால்  அவர்களுக்கு தகவல் சொல்லியிருக்கிறோம் என்று மடல். ஒரு வழியாக இரண்டாவது நாள் மாலை அந்த  விளம்பரம் தடை செய்யப்பட்டது.


சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் ஒரு மின்னஞ்சல் முகவரியின் மூலமாக அந்த தளத்தில் விளம்பரத்தை பதித்தை கண்டுபிடித்தோம். அந்த மின்னஞ்சல் நிறுவனம் ஒரு தமிழக நிறுவனம் என்பதால் நம்பிக்கையோடு தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் போலீசில் புகார் பதிவு செய்யச்சொன்னார்கள். போலீசில் புகார் கொடுக்கச்சென்றால் உங்க சொந்த ஊர் எதுவோ அங்கே போய் கொடுங்கள் என்று சொல்லிவிட, கடைசியாக நாங்கள் அந்த மாவட்ட எஸ்பியிடம் சென்று புகார் அளித்தோம். அவரோ நீங்கள் எங்கயாவது சுவரில் கிறுக்கி வைத்து இருப்பீர்கள் என்று சொல்லி கடைசியில் நாங்கள் எடுத்த அத்தனை முயற்சியையும் அவரிடம் சொன்னோம்.

கடைசியாக நாங்கள் அந்த பதிவை நீக்க எடுத்த முயற்சிக்காகவே கேஸ் பதிவு செய்ய ஒப்புக்கொண்டு டிஎஸ்பியிடம் அனுப்பிவைத்தார். கடைசியாக அவர்கள் பதிந்த வழக்கு நடுரோட்டில் பெண்களிடம் வம்பு செய்தல் என்ற குற்றத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தார்கள்.

சரி இந்த குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குநீங்களே மடல் அனுப்புங்கள் என்று சொன்னபோது அவர்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி ஜிமெயில் முகவரி. அந்த நிறுவனம் எப்படி  இவர்களை போலீசார் என்று நம்பும்.

அந்த விவகாரத்தைப்பற்றி எழுதினால் இன்னமும் எழுதலாம், அடிப்படை சாரம்சம் என்னவெனில் தொழில்நுட்ப பிரச்னைகளை அணுகக்கூடிய ஆட்கள் நம்மிடையே பயிற்றுப்பவிக்கப்பட வில்லை என்பதுதான். 9 வருடமாக இந்தப் பிரச்னை இன்னமும் தொடர்கிறது… இன்னமும் சிக்கல்தான்.

எந்த தளத்தில் விளம்பரம் பதிவு செய்யப்போட்டதோ அந்தத் தளம் இன்று தொடர்ந்து நடை பெற்றுதான் வருகிறது. தமிழகத்தில் விபச்சாரம் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்று கூட சந்தேகமாகி யிருக்கிறது அந்த தளத்தினைப் பார்த்து….

எனவே இந்தப்பிரச்னை எப்போதும் தொடரும். பெண்கள் சம்பந்தப்பட்ட புகாராக, அவர்களின் காணொளிகள், ஒலி நாடாக்கள்  தவறு என்று புகார் அளித்தால் அந்த நொடியே  சம்பந்தப்பட்ட காணொளி நிறுத்தப்படுமெனில் நாம் கொஞ்சம் தைரியமாக பெருமூச்சு விடலாம்.அது இல்லாதவரை நாமும் நம் பெண்டீரும் இப்படி பயந்தேதான் ஆகவேண்டும். எனவே தொழில் நுட்ப  நிறுவனங்களை முதலில் ஒரு கட்டுப்பாடுக்குள்  கொண்டுவாருங்கள், அதற்கு முதலில் தொழில்நுட்ப அறிவு கொண்ட அலுவலர்கள் மிக அவசியம்,

எனவே துளிர்களை கிள்ளுவது எந்த விதத்திலும் பொறுத்தமில்லை, சமூகத்திற்கு தீங்களிக்கும் அனைத்தையும் வேரறுப்பது சாலச்சிறந்தது. அதற்கு எதிர்கால நோக்கோடு சிந்திக்கத் தெரிந்த தலைவர்கள் தேவை.  பிரச்னைகள் மட்டும் பெரியதாக்கும் தலைவர்கள் அல்ல……

விழித்துக்கொள்ளுமா மத்திய மாநில அரசுகள்….?

செல்வமுரளி

http://visualmediatech.com

Home


Mobile : +91-99430-94945
Mail ID :- murali@visualmediatech.com