சென்னை,

மிழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3000 போனஸ் வழங்கப்படும் என்றும், பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.1000 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது

2016-2017ம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.