சென்னை: தமிழகத்தில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமானத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு வேட்டி,புடவை அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  (8.1.2021) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12,69,550 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முதன்முறையாக தைப் பொங்கல் திருநாளையொட்டி வேட்டி, அங்கவஸ்தரம் / சேலை மற்றும் பச்சரிசி, சிறுபருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக, 7 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகையாக 5 லட்சம் ரூபாய், இயற்கை மரணம் ஏற்படும் நேர்வில் உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய், மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாய், குடும்ப ஓய்வூதியம் 500 ரூபாய், மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வித் உதவித்தொகை, அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு, கட்டுமான தொழிலாளர் களுக்கான நடமாடும் மருத்துவமனைகள், தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வாரியத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு, கரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியது. அந்த வகையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு இரண்டு முறை தலா 1,000 ரூபாயும், 15 கிலோ அரிசி, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ பருப்பு அடங்கிய சிறப்பு நிவாரணத் தொகுப்பும் வழங்கப்பட்டது.

கரோனா பெருந்தொற்றால் வேலைவாய்ப்பின்றி பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் தைப் பொங்கல் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு முதல் முறையாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 5,94,147 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி மற்றும் அங்கவஸ்தரம், 6,75,403 பெண் தொழிலாளர்களுக்கு புடவை, அத்துடன் 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட 94 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அப்பொங்கல் சிறப்பு தொகுப்பினை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிடும் விதமாக முதல்வர் இன்று 7 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரருக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், தொழிலாளர் நல ஆணையர் எம். வள்ளலார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.