சென்னை: பொங்கல் பரிசுத் தொகை டோக்கனில் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி  திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகஅரசு வழக்கமாக வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு, ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த டோக்கன்களை அதிமுகவினர் விநியோகம் செய்து வருவதாகவும், சில இடங்களில், டோக்கனில் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் இந்தப் பொங்கல் பரிசுத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் அதிமுகவினர் சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது. இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்தப் பரிசுத் தொகை போய் சேராது எனவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று (டிச.30) நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் முறையிட்டார். இதையடுத்து, மனுவை பட்டியலிடும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் வில்சனுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பின்னர் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.