சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிகளுக்காக ஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட பல மாவட்டங்கள், மாநிலங்களில் பணி நிமித்தமாக வசித்து வருவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி, தமிழகஅரசு, சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதுபோல, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக  சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி முதல் 14 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுமார் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை தமிழக‌ அரசு இயக்கவுள்ளது. வரும் 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

சென்னையில்  6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், அதன்படி, ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்து‌கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில்‌ இருந்தும், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்.

மேலும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகளும்,

மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பொங்கல் பண்டிகையை முடித்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பி வருவதற்கு வசதியாக, வரும் 16 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.