சென்னை:

சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்க வேல் நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் பதில் அளித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் உத்தரவின்றி ஆவனங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறி உள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுபடி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார். பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இதனை சுட்டிக்காட்டி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  தமிழக அரசின் தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு பொன்மாணிக்க வேல் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அதில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக தான் நியமிக்கப்பட்டதையும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்றி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க சட்டப்படி அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.