தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை முதன்முறையாகப் படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.

இவர்களில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகளோடு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கியது. முதற்கட்டப் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு மேல் நடைபெறவுள்ளது. இதில் ஒருவர் பின் ஒருவராக இதர நடிகர்களும் இணைந்து கொள்ள உள்ளனர்.

இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன் , சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இதுவரை தமிழ்த் திரையுலகில் பலரும் எடுக்க முயன்ற ‘பொன்னியின் செல்வன்’ தோல்வியில் முடிவடைந்தது. தற்போது மணிரத்னம் மட்டுமே வெற்றிகரமாக ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.