அண்மையில் கோவா மாநிலத்துக்கு சென்ற இந்தி நடிகர் மிலிந்த் சோமன், தனது 55 –வது பிறந்த நாளை அங்கு வித்தியாசமாக கொண்டாடினார்.

தெற்கு கோவா கடற்கரையில் அவர் நிர்வாணமாக ஓட, அதனை அவரது மனைவி அங்கிதா புகைப்படம் எடுத்துள்ளார்.

நிர்வாணமாக கடற்கரையில் ஓடும் காட்சியை மிலிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஓர் அமைப்பின் தலைவர் கோவாவில் உள்ள கொல்வா காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததால், மிலிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மிலிந்த், நிர்வாணமாக ஓடியதில் தப்பு கிடையாது என அவருக்கு இந்தி நடிகை பூஜா பேடி வக்காலத்து வாங்கி உள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் “கோவாவில் மிலிந்த் நிர்வாணமாக ஓடியதில் ஆபாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆபாசம் என்பது நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நிர்வாணம் குற்றம் என்றால், எப்போதும் நிர்வாணமாக திரியும் நாகா சாமியார்கள் மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ள பூஜாபேடி, “உடம்பில் சாம்பலை பூசிக்கொண்டால், நிர்வாணம் இல்லை என்று அர்த்தமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை பூஜா பேடி, நாகா சாமியார்களின் நிர்வாண புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

– பா. பாரதி