எம பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றும் கால பைரவர்

எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் கால பைரவர்.

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலைக் கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகைக் காக்கின்றார். அவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.

எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது.

பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தைத் தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.

ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாகச் சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவை ஸ்ரீ பைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பவர் கால பைரவர். தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்பு பைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.