சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு  வருகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் பணிகள் நிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து,   தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் ஆக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய 3 பேர்  நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதில்,  கிரிஜா வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 அவர்களது மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி  நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும் அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜாவுக்கு  சுற்றுச்சூழல்  சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை.  எனவே, அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. அதனால், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.