வாடிகன்:

எகிப்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கு செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து போப் பிரான்சிஸ் கூறுகையில், ‘‘ஞாயிறு தோறும் பாரம்பரிய முறைப்படி தேவதைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். பாதிக்கப்பட்டவர்கள் அந்த சமயத்தில் வேண்டிக் கொள்வார்கள். அப்போது எகிப்து மசூதி தாக்குதலில் இறந்தவர்களுக்காகவும் வேண்டிக் கொண்டோம்.

இந்த தாக்குதல் பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் தொடர்ந்து ஜெபிக்கப்படும். இது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் காயப்படுத்தியுள்ளது’’ என்றார்.

முன்னதாக 305 பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தந்தி மூலம் போப் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.