வாடிகன்:

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள, தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனிலுள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில் எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், யாரும் இல்லாமல், போப் மட்டும் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். அதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள், ஒரு வரலாற்று சம்பவமாக அதை ஒளிபரப்பின.

இந்நிலையில், ‘வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும்’ என, வாடிகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போப் நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரசால், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஈஸ்டர் புனித வாரத்தின் அனைத்து வழிபாட்டு கொண்டாட்டங்களும், பிரார்த்தனைகளும் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்றும், ஏப்ரல் 12ம் தேதி வரையிலான பிரார்த்தனைகள், வாடிகனின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தில், நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.