தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய இடங்களில் மழை பெய்யக்கூடும். மழை பெய்யாத இடங்களில் வெப்பமானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் கூடலூரில் 3 சென்டி மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி,  குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக் கூடும். மேலும் வரும் 26 ஆம் தேதியன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.