கோவை:  மு.க.அழகிரி போட்டோவுடன் தலைமை ஏற்க வா என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு நிலவியது.

திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டுவிட்டார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் அவ்வப்போது போஸ்டர்கள் ஒட்டி அழகிரியை வரவேற்று வருகின்றனர்.

இந் நிலையில் கோவை நகரின் பல பகுதிகளில் மு.க.அழகிரி திமுகவிற்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் அஞ்சா நெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது ,உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர் , கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுபோன்று மற்றொரு போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் உண்மை தொண்டர்களின் உணர்வுகளை உயிரூட்ட தலைமை ஏற்க வா, அஞ்சா தலைவனே என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்து திமுகவினர் விசாரித்து வருகின்றனர்.