பிரபாகரன்
பிரபாகரன்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றினார்” என்று ஒய்வுபெற்ற இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை இராணுவத்தில் இருந்து  ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி  வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணி வந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த ஆதாரமும் கிடையாது.
அவர் ஒரு அன்பான குடும்பத் தலைவராக  இருந்தார். பிரபாகரன்,  அவரது குடும்பத்தினர் மற்றும்  விடுதலைப் புலிகளின் நிகழ்வுகள் குறித்த  10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழக்க வேண்டியிருக்கும்.
அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் பிரபாகரனிடம் உண்டு.
கமால் குணரத்ன
கமால் குணரத்ன

அவர், தான் எடுத்த முடிவில் மிக உறுதியாக இருப்பார்.   அந்த முடிவை சிறப்பாக நடைமுறைப்படுத்துவார்.
அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.
பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிட போர்  வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது.  அவர் ஆற்றலுள்ள போராளி படையை உருவாக்கியிருந்தார். வேவுபார்க்கும் போராளிகளில் துவங்கி , தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.
போரின் இறுதி சில மணி நேரம் வரை  விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது” என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.